சந்தேகத்திற்கிடமான முறையில் சிறுமி உயிரிழப்பு

author img

By

Published : Oct 8, 2021, 2:12 PM IST

death
death ()

குத்தாலம் அருகே 13 வயது சிறுமி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததையடுத்து மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளர் வசந்தராஜ் விசாரணை மேற்கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 9ஆம் வகுப்புப் படித்துவந்தவர் 13 வயது சிறுமி. இந்நிலையில், சிறுமி நேற்றிரவு (அக். 7) அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினர் ஒருவரது வீட்டிற்குப் போய்வருவதாகத் தனது பெற்றோரிடம் கூறிச் சென்றார்.

அவர் வீட்டைவிட்டுச் சென்று வெகு நேரமாகியும் திரும்பாததால் அவரது பெற்றோரும் உறவினர்களும் பல்வேறு பகுதிகளில் தேடத் தொடங்கினர். இருப்பினும் சிறுமி கிடைக்காததால் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், சிறுமி போய்வருவதாகப் பெற்றோரிடம் சொன்ன உறவினரின் வீட்டிற்குப் பின்புறம் உள்ள நீர் இல்லாத வாய்க்காலில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து அவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் சிறுமியின் உடலைக் கைப்பற்றினர். அப்போது அவர் அணிந்திருந்த பேன்ட் கிழிந்து ரத்தக் கரையுடன் இருந்தது தெரியவந்தது. இதனால் சிறுமியை யாரேனும் பாலியல் வன்புணர்வு செய்து கொலைசெய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் சிறுமியின் உடலை உடற்கூராய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பிவைத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளர் வசந்தராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

இதையும் படிங்க: தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு, 18 பேர் கவலைக்கிடம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.